யாழ்ப்பாண சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த விஜயம் இன்று(25.08.2026) மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆய்வு நடவடிக்கையையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்கு ஒருமு…
யாழ்ப்பாண சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இந்த விஜயம் இன்று(25.08.2026) மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆய்வு நடவடிக்கையையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கலந்துரையாடல்
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார்.
கைதிகளின் பிரச்சினைகள் இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார். இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன் மற்றும் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












