கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளைய கறுப்பினப் பேராசிரியராகப் பதவியேற்றுப் பரவலாக அறியப்பட்ட ஜேசன் ஆர்டே, தனது தகுதிகள் மற்றும் வாழ்க்கை வரலாறு குறித்த தொடர் சர்ச்சைகள் மற்றும் புதிய விசாரணைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். சமூகவியல் பேராசிர…

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளைய கறுப்பினப் பேராசிரியராகப் பதவியேற்றுப் பரவலாக அறியப்பட்ட ஜேசன் ஆர்டே, தனது தகுதிகள் மற்றும் வாழ்க்கை வரலாறு குறித்த தொடர் சர்ச்சைகள் மற்றும் புதிய விசாரணைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

சமூகவியல் பேராசிரியரான அவர் மீது கல்வித் திருட்டு (Plagiarism) மற்றும் தகுதி விவரங்களில் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பல்கலைக்கழகம் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து குட் லா பிரொஜெக்ட் (Good Law Project) இணையதளத்தில் வெளியிடப்பட்ட தனது ராஜினாமா அறிக்கையில் ஜேசன் ஆர்டே தெரிவித்துள்ளதாவது:

“கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஜீசஸ் கல்லூரியிலிருந்து உடனடியாக எனது பதவியிலிருந்து விலகுவதாக நான் மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியராகும் மாபெரும் கவுரவத்தை நான் ஏற்றுக்கொள்ளும்போது, அது சந்தேகத்திற்கு இடமின்றி எனது தொழில்முறை வாழ்க்கையின் மிகச்சிறந்த பாக்கியமாக இருந்தது. சிறு வயதில் ஆட்டிசம் (Autism) பாதிப்புடன் வளர நேர்ந்த எனக்கு, 11 வயது வரை பேசவே வராத சூழலில், கேம்பிரிட்ஜ் வரலாற்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த மிக இளைய பேராசிரியர் என்ற நிலையை அடைவது நான் கற்பனை செய்திராத ஒன்றாகும்.

உலகெங்கிலும் உள்ள பலரின் வரவேற்பு அளப்பரியது. எனது நியமனத்தை மட்டுமல்லாமல், திறமையும் விடாமுயற்சியும் நம்பிக்கையும் எத்தகைய பேரிடரையும் வெல்ல முடியும் என்பதையே ஆயிரக்கணக்கானோர் கொண்டாடினர். எனது மாணவர்களுக்குக் கற்பிப்பதும், அவர்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்வதும் எனது வாழ்நாளின் பாக்கியமாகும்.

இருப்பினும், எனது நியமனத்திற்குப் பிந்தைய ஆண்டுகள் கடுமையான பொதுச் சோதனைகளுக்கும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் உள்ளாகின. விமர்சனங்கள் கல்வித்துறையில் தவிர்க்க முடியாதவை என்றாலும், நான் எதிர்கொண்டவை சாதாரண விவாதங்களைத் தாண்டியவையாக இருந்தன. தொடரும் குற்றச்சாட்டுகளும் ஊகங்களும் எனக்கும் எனக்குப் பிடித்தமானவர்களுக்கும் மிகுந்த மன வேதனையை அளித்துள்ளன.

உயர் கல்வியின் மீதும், நேர்மையான ஆராய்ச்சியின் மீதும் உள்ள நம்பிக்கையின் காரணமாகவே நான் தொடர்ந்து பயணிக்க முயன்றேன். ஆனால், தனிப்பட்ட இழப்புகள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும்போது, ஒருவரால் எங்கு வரை தாங்க முடியுமோ அந்த எல்லையை நான் அடைந்துவிட்டேன். எனது நல்வாழ்வுக்காகவும், எனது குடும்பத்திற்காகவும், இந்த அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே ஒரே வழி என்று முடிவு செய்துள்ளேன்.

எனது மாணவர்களுக்கு நன்றி. உங்களுக்குக் கற்பித்தது எனது கல்வித்துறை வாழ்க்கையின் மிகச்சிறந்த கவுரவம். கடினமான காலங்களில் எனக்கு ஆதரவளித்த, என்னை நம்பிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது பணியின் முடிவு அல்ல, இந்த அத்தியாயத்தின் முடிவு மட்டுமே. எனக்கு சிறிது கால அவகாசம் தேவை, மீண்டு வருவேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜேசன் ஆர்டே தனது பி.எச்பி (PhD) ஆய்வறிக்கையின் சில பகுதிகளைத் திருடியதாகக் கடந்த ஆண்டின் இறுதியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், அவருக்குப் பட்டமளித்த லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் முறைகேடுகள் எமீதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அது நியாயமான தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

மேலும், ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகம் (Ohio State University) உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியதாக அவர் கூறிய தகவல்களில் முரண்பாடுகள் உள்ளதாகப் புகார்கள் எழுந்தன. ஓஹியோ பல்கலைக்கழகம் அவரை எந்தப் பதவியிலும் பணியமர்த்தவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளது.

தான் மேற்கொண்ட தொண்டு நடவடிக்கைகள் மற்றும் மராத்தான் ஓட்டங்கள் குறித்த புள்ளிவிவரங்களிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இது குறித்துப் புதிய விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் காக்கும் பொருட்டு இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டதை அடுத்து, ஜேசன் ஆர்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.