பெரும் எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டமை குறித்த செய்திகள் வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அதிகாரிகள் சர்வதேச ஊடகங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் செய்தி சேகரிக்கத் தடை விதித்துள்ளனர். இதன் மூலம், பத்திரிகையாளர…

பெரும் எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டமை குறித்த செய்திகள் வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அதிகாரிகள் சர்வதேச ஊடகங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் செய்தி சேகரிக்கத் தடை விதித்துள்ளனர்.

இதன் மூலம், பத்திரிகையாளர் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தான் அரசு, சர்வதேச ஊடகங்களுக்கு கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய விதிகளின்படி, பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் ஆகிய மூன்று நகரங்களைத் தவிர, நாட்டின் எங்கு சென்று செய்தி சேகரிக்க வேண்டுமானாலும் எவரும் (பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட) முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

உலக ஊடக சுதந்திரச் சுட்டெண்ணில் 180 நாடுகளுக்குள் 153 ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தானில், தொடர்ச்சியான ஆட்சிகள் உள்ளூர் ஊடகங்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளையும் தணிக்கைகளையும் விதித்துள்ளன. இருப்பினும், சர்வதேச ஊடகங்கள் மீது இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டமை குறித்த செய்திகளை சர்வதேச ஊடகங்கள் மாத்திரம் வெளியிட்டதைத் தொடர்ந்தே, இந்த அதிரடியான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்தில் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்கள் மற்றும் பிராந்தியத் தேர்தல்களை மக்கள் புறக்கணித்தது குறித்த செய்திகளை வெளியிட்டதை அடுத்து, அல் ஜசீரா செய்தி வலைத்தளம் பாகிஸ்தானில் முடக்கப்பட்டது.

அல் ஜசீவாவின் செய்தி வெளியீட்டைப் பாகிஸ்தானின் தகவல் அமைச்சு, பரபரப்பான செய்திகளை வெளியிடும் இழிவான சொல்லான “மஞ்சள் பத்திரிகை” (Yellow Journalism) என்று கூறி கடுமையாக விமர்சித்துள்ளது.

செய்தி வலைத்தளத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்றாலும், வி.பி.என் (VPN) உதவியின்றி அதனை அணுக முடியாத நிலை உள்ளது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலிருந்து பி.பி.சி (BBC) செய்தி நிறுவனம் கள நிலவரங்களை வெளியிட்டதுடன், ஆயத்தற்ற போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் போராட்டக்காரர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியதையும் மேற்கோள் காட்டியது. இதற்குப் பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அனைத்துப் பத்திரிகையாளர்களையும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டனர்.

தகவல் அமைச்சு “வெளிநாட்டு ஊடக எளிமைப்படுத்தல் வழிகாட்டுதல்கள் 2026” (Foreign Media Facilitation Guidelines 2026) என்று அழைக்கும் இந்த புதிய விதிகளில், பத்திரிகையாளர்களுக்குச் செய்தி சேகரிக்க அனுமதி வழங்குவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்த காலக்கெடு எதும் குறிப்பிடப்படவில்லை.

பாகிஸ்தான் பெடரல் யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான நசீர் ஜைதி கூறுகையில், போராட்ட இயக்கங்கள், எதிர்க்கட்சிகள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் பாகிஸ்தானின் ஒடுக்குமுறை அரசியல் சூழல் ஆகியவற்றை சர்வதேச ஊடகங்கள் பாரபட்சமின்றி வெளிப்படுத்தி வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

“பல தசாப்தங்களாகப் பல அரசாங்கங்கள் செய்திகளை மறைக்க முயன்று தோல்வியடைந்தன; ஏனெனில் சர்வதேச ஊடகங்கள் அதனைத் தொடர்ந்து வெளியிட்டன. தற்போது ஊடகவியலாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த அடக்குமுறை விதிகளைக் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் உண்மையை வெளி உலகிற்குத் தெரியப்படுத்த விரும்பவில்லை” என்று ஜைதி கூறினார்.

புதிய விதிகள் ஊடகவியலாளர்களின் நடமாட்டத்தின் மீதான முழுமையான தடை அல்லது ஊடகச் சுருக்கம் அல்ல என்று அரசாங்கம் மறுத்துள்ளது.

சர்வாதிகாரி ஜெனரல் ஜியா உல்-ஹக்கின் ஆட்சிக் காலத்தில் ஊடக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து பகிரங்கமாகச் சாட்டையடி வாங்கிய நசீர் ஜைதி, தன் வாழ்நாளில் இது போன்ற ஒரு காலக்கட்டத்தைக் கண்டதில்லை என்றார்.

“நான் இராணுவச் சட்டங்களின் கீழும் பணியாற்றியிருந்தாலும், சர்வதேச ஊடகங்கள் மீது இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை நான் பார்த்ததேயில்லை. இது இராணுவச் சட்டத்தைவிட மோசமானது” என்றும் அவர் மேலும் கூறினார்.

புதிய வழிகாட்டுதல்களின்படி, நாட்டில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் பதிவு செய்வதும் அங்கீகாரம் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், “பாகிஸ்தானின் சித்தாந்தம், இறையாண்மை, பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்குக்கு எதிரான செயல்களில்” ஈடுபடும் பத்திரிகையாளர்கள் தங்கள் ஊடக அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்றும் புதிய விதிகள் குறிப்பிடுகின்றன.

இந்த நிபந்தனைகள் மிகவும் தெளிவற்றதாகவும், புரிந்துகொள்ள முடியாதவாறு கடினமானதாகவும் இருப்பதாகச் சட்ட நிபுணர்களும் பத்திரிகையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

“பேச்சுச் சுதந்திரத்தையும் சர்வதேச ஊடகங்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் இந்த விதிகள் மூலம் பாகிஸ்தான் உலகிற்கு மிகவும் தவறான செய்தியையே அனுப்புகிறது” என்று ஜைதி கூறினார்.