செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி, “நீதியின் ஓலம் 2” கவனயீர்ப்புப் போராட்டம் வௌ்ளிக்கிழமை (14) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (13) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஏற்பாட்டுக் குழுவினர் கருத்துத் த…

செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி, “நீதியின் ஓலம் 2” கவனயீர்ப்புப் போராட்டம் வௌ்ளிக்கிழமை (14) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (13) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஏற்பாட்டுக் குழுவினர் கருத்துத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக, யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 544-க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் ஒரு சிறு சாட்சியம் மட்டுமே. இந்தப் புதைகுழியை இலங்கை அரசியல் இயந்திரங்கள் முறையாக விசாரணை செய்யாமல் மூடி மறைத்து வந்தன. இருப்பினும், கடந்த ஆண்டு அப்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக நடைபெற்ற அகழ்வின்போது மனித எலும்புக்கூடுகள் மீண்டும் கண்டறியப்பட்டன. இதையும் மூடி மறைக்கும் முயற்சிகளை தற்போதைய அரசுத் தரப்பும் மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே இதுவரை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.”

அதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 14.08.2026 வெள்ளிக்கிழமை முதல் 17.08.2026 வரை நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் “நீதியின் ஓலம் 2” எனும் பெயரில் சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கைகள்:

செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும்.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.

இனப்படுகொலையில் ஈடுபட்ட படை அதிகாரிகளுக்கு அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறுத்தவும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.

ஓர் சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய வேண்டும்.

வடக்கு-கிழக்கு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

‘Unitary State’ / ‘Ekiya Rajya’ அடிப்படையிலான போலித் தீர்வுத் திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அதற்கு மாற்றீடான சட்டமூலம் (PTSA) முழுமையாக ரத்து செய்யப்பட்டு மீளப்பெறப்பட வேண்டும்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் 14.08.2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு செம்மணியில் ஆரம்பித்து, 15 மற்றும் 16-ஆம் திகதிகளில் அடையாளப் போராட்டமாகத் தொடரும். இறுதி நாளான 17.08.2026 அன்று முற்பகல் 11 மணிக்கு யாழ். நூலகத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகி, யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை சென்றடையவுள்ளது.

இந்தப் போராட்டம் வெற்றியடைய அனைத்துத் தரப்பினரின் பேராதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.