நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் மக்கள் மத்தியில் சென்று அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவி…
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் மக்கள் மத்தியில் சென்று அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவர்களின் போலியான அரசியல் வேடங்களுக்கு மக்கள் மீண்டும் ஏமாறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விலகியதாகவும், அதன் பின்னரே அரசியல் மாற்றம் ஏற்பட்டதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் நிலவியதாகவும், அரசியல்வாதிகள் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பின்னர் தேசப்பற்றாளர்கள் போன்று மக்கள் மத்தியில் தோன்றியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அரசியல் அலைக்கு ஏற்ப வாக்களிக்கும் பழக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும் எனவும், இல்லையெனில் ஊழல்வாதிகளும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களும் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்கள் தெரிவுசெய்த புதிய அரசியல் கலாசாரத்தை பாதுகாப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது எதிர்க்கட்சித் தரப்பில் காணப்படும் அரசியல் ஒன்றிணைவு நாட்டுக்காக உருவானதல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக கடன் பெற்றதாகக் கூறிய போதிலும், அதன் பயன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை எனவும், கடன் பெற்ற நிதியின் மூலம் தமது குடும்பங்களை வளப்படுத்தி வெளிநாடுகளில் சொத்துக்களை சேர்த்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கமும் அந்த செயற்றிட்டங்களை அமுல்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு இடமளிக்காமல் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக ஊழல்வாதிகள் பலரும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், தாம் தற்போதைய அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்றும், அரசியலில் மாற்று சக்தியாகத் தொடர்ந்து செயற்படுவேன் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.












