அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நிராகரித்துள்ளார். அவர், கப்பலில் நிலவும் மோசமா…

அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நிராகரித்துள்ளார்.

அவர், கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகள் “முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கு அமெரிக்காவின் USS George Washington விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இது, USS Abraham Lincoln கப்பலில் நீண்டகாலப் பணியமர்த்தலால் வீரர்களின் மனநலம் மற்றும் விநியோகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

USS George Washington கடந்த வாரம் வியட்நாமின் டா நாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

அதனுடன் ஒரு க்ரூஸர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலும் இணைந்துள்ளன.

இந்தக் கப்பல்கள் சிங்கப்பூர் நீரிணையை கடந்து சென்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, Washington தற்போது மலாக்கா நீரிணையில் இருந்ததாகவும், இந்தியப் பெருங்கடலை நோக்கி பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USS Abraham Lincoln-க்கு மாற்றாக George Washington மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படலாம் என முன்னதாக Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது.போர்ச் சூழ்நிலை

பொதுவாக அமெரிக்க கடற்படை வீரர்களின் பணியமர்த்தல் காலம் 6 முதல் 9 மாதங்கள் வரை இருக்கும். ஆனால் போர் சூழ்நிலைகளில் அது நீட்டிக்கப்படலாம்.

USS Abraham Lincoln இந்த வாரத்துடன் 260 நாட்களுக்கும் மேலாக கடலில் உள்ளது.

இது நவீன காலத்தில் ஒரு விமானந்தாங்கிக் கப்பல் மேற்கொண்டுள்ள மிக நீண்ட பணியமர்த்தல்களில் ஒன்றாகும்.

இந்தக் கப்பலில் பணியாற்றும் வீரர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், சிலர் கப்பலில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Lincoln கடந்த 2025 நவம்பர் 21ஆம் திகதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது.

2026 ஜனவரியில் மத்திய கிழக்கை சென்றடைந்தது. பின்னர் பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு நிலைநிறுத்தப்பட்டது.

போர்ச் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய விநியோக மையங்கள் பாதிக்கப்பட்டதால், கப்பலில் உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அஞ்சல் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டுள்ளது.பென்டகனிடம் பொறுப்புக்கூறல் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், USS Lincoln கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகளை நிராகரித்துள்ளார்.

நீண்டகாலப் பணியமர்த்தலிலும், குறைவான துறைமுகப் பயணங்களுடனும் கடலில் பணியாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டியுள்ளார். ஆனால் Navy Times மற்றும் Stars and Stripes உள்ளிட்ட இராணுவ செய்தி நிறுவனங்கள், கப்பலில் தற்கொலை முயற்சிகள் மற்றும் வீரர்களின் மனஉறுதி குறைந்து வருவது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக பல ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பென்டகனிடம் பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளனர்.

கனெக்டிகட் மாநில செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால், USS Lincoln-ன் நீண்டகாலப் பணியமர்த்தல் குறித்து கடற்படை தலைமையிடம் பல கேள்விகளுக்கு பதில் கோரியுள்ளார்.

அரிசோனா செனட்டரும் முன்னாள் மரைன் வீரருமான ரூபன் கலேகோ, கப்பலில் வீரர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப்

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான மோதல் சமீப வாரங்களில் ஓரளவு தணிந்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான முற்றுகையை அமெரிக்க கடற்படை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்தப் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தெளிவான திட்டத்தை வெளியிடவில்லை.

அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், அமெரிக்கா இந்த முற்றுகையை “காலவரையின்றி” தொடர முடியும் எனக் கூறியுள்ளார்.