ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுசரிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம், “பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை. இப்போதே செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று (30) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையை அறியும் உரிமை…
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுசரிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம், “பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை. இப்போதே செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று (30) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையை அறியும் உரிமை, நீதியைப் பெறும் உரிமை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இத்தினம் வலியுறுத்துகிறது.
2006ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நபர்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம், 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு முதல் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை நீண்டகாலமாக தீர்வின்றி தொடர்கிறது. உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் பலரின் நிலை தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளிவராத நிலையில், அவர்களது குடும்பங்கள் நீண்டகாலமாக நீதிக்காகவும் உண்மையை அறியும் உரிமைக்காகவும் போராடி வருகின்றனர்.
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சட்டத்தின் கீழ் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் இருப்பிடம் தொடர்பான உண்மையை கண்டறிவதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதிலளிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
அண்மைய அறிக்கையொன்றில், காணாமல் போனவர்களில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ள போதிலும், அவர்களின் விபரங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஒரு தனிநபருக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல; அது குடும்பங்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் நீண்டகால அச்சத்திலும் வேதனையிலும் ஆழ்த்தும் மனித உரிமை மீறலாகும்.
பல ஆண்டுகளாக தமது அன்புக்குரியவர்களின் வருகைக்காக காத்திருக்கும் குடும்பங்களுக்கு உண்மையும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய தினத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.












