மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழை…
மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (13) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரின் பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதுடன், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், மீனவர்களுக்கான கட்டிடங்களை அமைத்தல், இறங்குதுறைகளுக்கான மின்விளக்குகளை அமைத்தல், ஐஸ் தொழிற்சாலையை மீள இயங்கச் செய்தல், மீனவர் வீதிகளை அமைத்தல், குட்டைகளில் மீன் வளர்த்தல், மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களை அபிவிருத்தி செய்தல், எரிபொருள் நிலையங்களை அமைத்தல், மீன்பிடி நடவடிக்கைகளில் காணப்படும் சவால்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடி வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல், மீன்பிடி உபகரணங்கள் தொடர்பான பிரச்சினைகள், கடல் மற்றும் நீர்நிலைகளில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், மீன்பிடி வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மீனவர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்ததுடன், அவற்றுக்கு நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.












