பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகிப்பதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சேர்த்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கி…

பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகிப்பதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சேர்த்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெஹிவளையைச் சேர்ந்த 3​2 வயதுடைய நபர் ஒருவர் முதன்முதலாக இந்த போதைப்பொருளுடன் கல்கிசை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் வாட்ஸ்அப் அழைப்பு மூலம் போதைப்பொருளை பெற்றுக் கொள்ள வேண்டிய இடம் குறித்த தகவலை வழங்கியதாகவும், அதற்கமையவே இந்தப் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அந்தப் போதைப்பொருள் பொதியை பொரளை வனாத்த வீதியில் வைத்து மற்றொரு நபரிடம் ஒப்படைக்கவிருந்ததாக சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கல்கிசை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரியின் தலைமையில் அந்த நபரைத் கைது செய்வதற்குத் திட்டம் தீட்டப்பட்டது.

இதன்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த நபரொருவர் சந்தேகநபருக்கு அருகில் சென்று போதைப்பொருள் அடங்கிய பொதியைப் பெற முற்பட்ட போது, அங்கு மறைந்திருந்த பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேகநபரைக் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைதான சிறைச்சாலை அதிகாரி கடந்த ஜனவரி மாதமே இச்சிறைச்சாலையில் சேவைக்குச் சேர்ந்துள்ளதுடன், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தங்காலை - பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.