ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் மங்கிவரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானின் ஆதரவு பெற்ற யேமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் செவ்வாய்க்கிழமை (11) கப்பல் போக்குவரத்து மீது தனித்தனியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதேவேளை, அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்காவிட்டா…

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் மங்கிவரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானின் ஆதரவு பெற்ற யேமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் செவ்வாய்க்கிழமை (11) கப்பல் போக்குவரத்து மீது தனித்தனியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஓமன் வளைகுடா மற்றும் செங்கடல் நுழைவாயிலான பாப்-எல்-மண்டேப் நீரிணை ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போர் தொடர்பில் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என தொடர்ந்து தெரிவித்து வந்த போதிலும், மோதல் முடிவுக்கு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படவில்லை.

செங்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள பாப்-எல்-மண்டேப் நீரிணையில் சிறிய சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஹவுத்திகள் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் நான்கு கப்பல் ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக யேமன் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹவுத்தி எதிர்ப்பு இராணுவக் குழுவைச் சேர்ந்த இரு யேமன் மீட்புப் பணியாளர்களும் உயிரிழந்ததாக கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

‘திஹாமா’ (Tihamah) என்ற எகிப்துக்குச் சொந்தமான கப்பலில் இடம்பெற்ற இந்த உயிரிழப்புகள், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகளின் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களில் பதிவான முதல் உயிரிழப்புகளாகும்.

இந்நிலையில், பனாமா கொடி ஏற்றிய சரக்குக் கப்பல் ஒன்றின் திசைதிருப்பும் அமைப்பை செயலிழக்கச் செய்வதற்காக அமெரிக்க கடற்படையின் MH-60 ஹெலிகொப்டர் இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை மீறுவதை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை குறித்த கப்பல் புறக்கணித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடாவை நோக்கிப் பயணித்தபோது பாகிஸ்தான் கடற்பரப்பில் அந்தக் கப்பல் தாக்கப்பட்டதாக கடல்சார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்ததுடன், உலகளாவிய பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன.

பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்த விலை 1.4 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 88.91 அமெரிக்க டொலராகவும், அமெரிக்க மசகு எண்ணெய் விலை 1.3 சதவீதம் உயர்ந்து 83.20 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.