கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்திய ஊழியர் ஒருவருக்கு, அந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்த…
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்திய ஊழியர் ஒருவருக்கு, அந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதிகளான ஜனக் டி சில்வா, சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள கையுறை உற்பத்தி தனியார் நிறுவனம் ஒன்றின் "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக இரகசியமாக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்தியமை தொடர்பில், அதன் ஊழியர் ஒருவருக்கு எதிராக அந்நிறுவனம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.குற்றம் சாட்டப்பட்டவர் அந்நிறுவனத்தில் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவராவார்.
இறப்பர் பாலைப் பயன்படுத்தி "தொழில்துறை கையுறைகளை" உற்பத்தி செய்யும் தமது நிறுவனம், அச்செயல்முறைக்குரிய தொழில்நுட்பம் மற்றும் இரகசியக் விடயங்கள் தொடர்பில் காப்புரிமையையும் பெற்றுள்ளதாகப் முறைப்பாட்டாளரான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிராளி திறமையான மற்றும் நம்பிக்கையான ஊழியராகச் செயற்பட்டதால், அத்தொழில்நுட்ப மற்றும் வணிக இரகசியங்கள் குறித்த பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டிருந்ததாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பணியாற்றிய எதிராளி, 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதியோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள நாளிலோ எவ்வித அறிவிப்புமின்றிப் பணியிலிருந்து விலகியதாகவும், அதே ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அதனை அறிவித்துக் கடிதம் அனுப்பியதாகவும் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தமது நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் கொரிய கையுறை உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், தமது நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வணிக இரகசியங்களை நிதி நன்மைகளுக்காக அந்த நிறுவனத்திற்கு எதிராளி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் முறைப்பாட்டாளர் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
எனினும், வர்த்தக மேல் நீதிமன்றத்தில் தனது தற்காப்பு வாதத்தைச் சமர்ப்பித்த எதிராளி, முறைப்பாட்டாளர் நிறுவனத்தின் உற்பத்தி அல்லது வணிக இரகசியங்கள் எதுவும் தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தனது கல்வித் தகுதி மற்றும் பதவிக்கு அமைய இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ தனக்குத் திறன் இருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.மேலும், இந்நிறுவனத்தின் எந்தவொரு இரகசியத் தகவலையும், வணிக அல்லது உற்பத்தி தொழில்நுட்ப இரகசியங்களையும் தான் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கையுறை உற்பத்தி இரகசியங்கள் மற்றும் வணிக இரகசியங்கள் எதிராளிக்கு வழங்கப்பட்டிருந்தன என்பதை நிரூபிக்க முறைப்பாட்டாளர் நிறுவனம் தவறிவிட்டது என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
எதிராளியின் கல்விப் பின்னணியைக் கருத்தில் கொள்ளும்போது, இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம், அறிவு மற்றும் வணிக இரகசியங்களைப் புரிந்துகொள்ளவோ அல்லது வேறு தரப்பினருக்கு வழங்கவோ அவருக்கு இயலுமை இல்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், வர்த்தக மேல் நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தியடையாத முறைப்பாட்டாளர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதனை விசாரணை செய்த பின்னர், நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன் தமது தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன:
"வர்த்தக மேல் நீதிமன்ற விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை மேல் நீதிமன்ற நீதிபதி சரிவர பகுப்பாய்வு செய்யவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம், எதிராளி பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அந்நிறுவனத்தின் உற்பத்தி, வணிக இரகசியங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தகவல்களை நிதி நன்மைக்காக மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது. அதற்கமைய, மனுதாரர் நிறுவனத்திற்குரிய காப்புரிமையின் படி இவ்வாறான உணர்வுப்பூர்வமான தகவல்களை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதையோ அல்லது சுரண்டுவதையோ தடுத்து எதிராளிக்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்கத் தீர்மானிக்கிறேன்," என உத்தரவிட்டார்.
மேல்முறையீட்டாளர் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 50 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்படுவதாகவும், அதற்கமைய எதிராளி 50 மில்லியன் ரூபாய் தொகையையும் வழக்குக் கட்டணத்தையும் மேல்முறையீட்டாளர் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, 2019.03.29 அன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












