தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவ…

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று(30.07.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் மீதான இனவாதம்

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அரசியல் கைதிகளை என்று எவரும் இல்லை" என சிங்கள பௌத்த அரசியல் நிலைப்பாட்டில் நின்று தற்போதைய அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அண்மையில் (22/7) நாடாளுமன்றத்தில் கூறியதோடு அரசியல் கைதிகள் என்பதற்கான பொருள் கோடல் சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் இல்லை என நியாயம் கற்பித்திருப்பது தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிலைப்பாட்டினால் தொடர்ந்தும் தண்டிக்கப்படும் குற்றம் என்பதை நிரூபிக்கவே அன்றி வேறொன்றுமில்லை.இந்நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் மதிக்காது 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புகள் கொண்டு வந்ததோடு தமிழ் தேச அரசியலை அழிக்கவும், ஒட்டுமொத்த தமிழர்களையும் (சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு கைகோர்த்தவர்கள் தவிர) அனைவரையும் பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள் என அடையாளப்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொண்டு சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக பொருள் கோடல் இல்லை என்பது அரசியல் கேளிக்கூத்தாகும்.

யுத்தத்தினை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என மார்தட்டும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும், இறுதி யுத்த நாட்களில் நானே நாட்டின் தலைமை பொறுப்பிலிருந்தேன் எனக் கூறும் மைத்திரியின் ஆட்சிக்காலத்திலும் அரசியல் கைதிகள் சமூகமயமாக்கப்பட்டனர்.

அது அவர்களின் அரசியல் தேவைக்காகவே அன்றி தமிழர்களின் அரசியல் நலனுக்காக அல்ல என்பதையும் கூற விரும்புகின்றோம்.

இறுதியாக தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர் தமிழர் தாயகத்தில் தனது தேர்தல் வாக்கு வேட்டை மேடைகளில் நின்று "நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்" என வாக்குறுதி அளித்து தமிழர்களின் வாக்குகளை கவர்ந்து பதவியில் அமர்ந்த பின்னர், நீதி அமைச்சர் ஊடாக தனது நிலைப்பாட்டினை தெரிவிப்பதும் தனதும் தனது அரசாங்கத்தினாலும் நிலைப்பாட்டினை சிங்களவர்களுக்கு வெளிப்படுத்தவே. இது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்.

சிறையில் வாடும் அரசியல் கைதிகள்

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என்பது வரலாற்று உண்மை.

அரசியல் கைதிகளாக தமிழர்களால் அடையாளப்படுத்தப்பட்டோரின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும், தாயகத்திற்கு வெளியில் கொழும்பு நகரிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் விடுதலைக் குரல்கள் எழுப்பப்பட்டன. அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக சாகும் வரையான உண்ணாவிரத போராட்டங்கள் செய்தும் எத்தகைய பலனும் கிட்டவில்லை.

ஜனாதிபதியிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை

இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்"ஜனாதிபதி அநுரகுமாரவிடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கும்பிட்டு கேட்டு விட்டோம். அதைவிட வேறு எவ்வாறு கேட்பது" என பகிரங்கமாக கூறிய விடயம் தமிழர்களுக்கு வேதனை அளிக்கின்றது.

ரவிகரன் மேற்கூறிய கூற்றினை கூறியதன் மூலம் எதனை எதிர்பார்த்தார் என்பதைவிட இவ்விடயம் உண்மையாக இருக்குமாயின் அது தமிழர்களுக்கும், தமிழர்களின் அரசியலுக்கும், அரசியல் கைதிகளுக்கும் பலத்த அவமானமாகும். நாங்கள் கும்பிட வேண்டும் அவர்களின் காலடியில் விழ வேண்டும் என்பதே சிங்கள பேரினவாதத்தின் விருப்பமாகும்.

மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். தமிழர்களின் விடுதலை அரசியல் செயற்பாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி தற்போதும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஆக்கப்பூர்வமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான சட்ட திருத்தங்களை செய்யுங்கள். அரசியல் ரீதியில் போராடி சிறைகளில் நீண்ட காலம் வாடுவோரை பாதுகாக்கவும் அவர்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்கின்றோம்.

உங்கள் அரசியல் தேவைக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக எடுக்கின்ற முயற்சிக்குள் சட்டத்துறை அதன் சுயாதீனம் சிக்கி இருக்கின்ற அவல நிலையினை முழு நாடும் அறிந்ததே.

இத்தகைய நிலையிலும் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதன் முன்னோடியாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட திருத்தங்களை சடுதியாக மேற்கொள்வது நாட்டிற்கும் நாட்டின் அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல நாட்டின் சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பதையும் கூற விரும்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.