22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்களின் எண்ணிக்கையே, அதற்குச் சமூகத்தில் உள்ள எதிர்ப்பைப் புரிந்துகொள்ளப் போதுமானது என மக்கள் சார்ந்த ஐக்கிய எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், வியாழக்கிழமை (20) அன்று த…

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்களின் எண்ணிக்கையே, அதற்குச் சமூகத்தில் உள்ள எதிர்ப்பைப் புரிந்துகொள்ளப் போதுமானது என மக்கள் சார்ந்த ஐக்கிய எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், வியாழக்கிழமை (20) அன்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்குகளை விசாரிக்கும் 13 நீதிபதிகளின் பங்கேற்புடனேயே குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தாங்கள் கோரியுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறினார். மக்கள் சார்ந்த ஐக்கிய எதிர்க்கட்சியின் கொழும்பிலுள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

"இலங்கை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சில மணிநேரங்களிலேயே நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். முதல் 24 மணி நேரத்திற்குள் 38 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு முன்னர் 21 அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், எந்தவொரு திருத்தத்தின் போதும் இவ்வாறான மனுக்களின் பெருக்கத்தை நாங்கள் கண்டதில்லை.

இது ஆரம்பம் மட்டுமே, முடிவு அல்ல. மனுக்களைச் சமர்ப்பிக்க இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. அந்த இரண்டு வாரங்கள் முடிவடையும் போது, மொத்தம் எத்தனை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்? உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள வரையறுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், இந்த மனுக்களின் குவியலை விசாரித்து முடிக்க முடியுமா என்பது ஒரு கேள்வியாக உள்ளது. இதிலிருந்து, சமூகத்தில் எந்தளவு தீவிரமான கருத்து நிலவுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

எங்கள் மனுவின் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு மிகத் தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளோம். அதில் இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன:

முதல் விடயம், இது குறித்து உயர் நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியாது என்பதாகும். ஏனெனில், இந்தத் திருத்தத்தின் விளைவாக, தற்போதைய பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பெரிய நன்மை கிடைக்கின்றது. எனவே, 'தங்கள் வழக்கைத் தாங்களே விசாரிக்க முடியாது' என்ற அடிப்படை நீதித்துறை தத்துவம் இங்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும்; மக்களின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும். இதற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு   நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக மிகத் தெளிவான நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. நாங்கள் முன்வைக்கும் சட்ட வாதங்களுக்கு வலுவான அடிப்படை உள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் கொண்டுவருவதாக இருந்தால், அதற்குத்  நிச்சயமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

இரண்டாவது விடயம், இந்த வழக்கை விசாரிக்க ஒரு முழுமையான நீதிபதிகள் குழாமை (Full Bench) நாங்கள் கோருகிறோம். அதாவது, உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்குகளை விசாரிக்கும் அனைத்து 13 நீதிபதிகளும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்."