இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால…

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து நீண்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.எதிர்கால திட்டங்கள்

2022/2023 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, டித்வா அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு புனரமைப்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு இந்தியாவின் ஆதரவு அவசியமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிராந்திய அச்சுறுத்தலாக மாறியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தால் முகங்கொடுக்க நேரிடும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தொழில்நுட்பம், வலுசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கு உட்பட்டு இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.