திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரழிவு ஏற்பட்டு பல மணி நேரங்களுக்குப் பின்னரும், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இல்லாத நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. சீனாவுக்கும் நேபாளத்த…
திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரழிவு ஏற்பட்டு பல மணி நேரங்களுக்குப் பின்னரும், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இல்லாத நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.
சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே பாயும் ஆற்றின் கரைகளில் இருந்து மண் மற்றும் இடிபாடுகளுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், பல கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
384 சுற்றுலாப் பயணிகள் மாயம் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 19 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேரழிவு ஏற்பட்டு எட்டு மணி நேரத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் அமெரிக்கர்கள், இந்தியர்கள், ஒரு ஆஸ்திரேலியர், மலேசியர்கள் மற்றும் பிரித்தானியர்கள் உள்ளடங்குவதாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
நேபாள பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள காணொளிகள் மற்றும் படங்களில், வெள்ளநீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி, அதன் பாதையில் உள்ள வீடுகளை அடித்துச் செல்வது பதிவாகியுள்ளது.இதேவேளை, ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் (AFP) வெளியிட்டுள்ள படங்களில், சேற்று மண்ணுக்குள் சிக்கியுள்ள வீடொன்றின் மேல் தளம் மட்டும் வெளியே தெரியும் காட்சியும் பதிவாகியுள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதையடுத்து, ஆற்றங்கரையில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரித்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் பணியாளர்களை அனுப்பியுள்ளதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது. நீர், மின்சாரம் மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளிட்ட சுமார் 430 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின்சார வசதிகள் சேதமடைந்துள்ளதாக நேபாள மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பேரிடரால் மின் உற்பத்தி, மின் கடத்தல் மற்றும் விநியோக வசதிகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












