செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழாய்வு, மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு இன்று (07) 100 நாட்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அகழாய்வின் முதல் கட்டம் 9 நாட்களும், இரண்டாம் கட்டம் 45 நாட்களும், தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்டம் 46 நாட்களையும் நிறைவு செய்துள்ள…
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழாய்வு, மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு இன்று (07) 100 நாட்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அகழாய்வின் முதல் கட்டம் 9 நாட்களும், இரண்டாம் கட்டம் 45 நாட்களும், தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்டம் 46 நாட்களையும் நிறைவு செய்துள்ள நிலையில், மொத்த களப்பணி 100 நாட்களாக உயர்ந்துள்ளது.
மூன்றாம் கட்டத்தின் 46ஆவது நாள் பணிகளின் போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், மூன்று கட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில் 501 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டு, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அகழாய்வில் மேலும் மூன்று தொல்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு மேலாடை முள் (Shirt Pin) அடங்குகின்றன.
இதற்கிடையில், தற்போது அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அப்பாலும் புதைகுழிகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அருகிலுள்ள இரண்டு இடங்களில் பரிசோதனை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் ஒரு இடத்தில் புதிய மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












