இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமேதகு வெய் ஹுவாச்சியாங் (Wei Huaxiang) தனது பதவியேற்பதற்காக இலங்கை வந்தடைந்துள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மைகளுடன் கூடிய ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதியளிப்பதாக அவ…
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமேதகு வெய் ஹுவாச்சியாங் (Wei Huaxiang) தனது பதவியேற்பதற்காக இலங்கை வந்தடைந்துள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மைகளுடன் கூடிய ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் வந்திறங்கியதும் தனது எழுத்துமூல உரையை வெளியிட்ட தூதுவர் வெய், சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களால் இந்நிதியம் தனக்கு வழங்கப்பட்டமை “பெரும் பெருமையும் பாக்கியமும் ஆகும்” எனக் குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் வளமான நாகரிகம், இயற்கை அழகு மற்றும் அதன் மக்கள் மீது தனக்குள்ள ஈர்ப்பையும் வெளிப்படுத்தினார்.
பண்டைய கடல்சார் வர்த்தகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப் பாதை வரை நீண்டு செல்லும் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவு வரலாற்றை அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 70 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான ரப்பர் - அரிசி ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆதரவுக்கும் ஒற்றுமைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டார்.
தூதரக உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, பெல்ட் அண்ட் ரோடு (Belt and Road Initiative) ஊடான ஒத்துழைப்புகள் மற்றும் நீர் தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகள் மூலமாக சீனா - இலங்கை உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வந்துள்ளதாக அவர் கூறினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள், இலங்கையின் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை 2025 ஆம் ஆண்டில் சீனாவுக்கான தமது உத்தியோகப்பூர்வ பயணங்களின்போது சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய வியூக வழிகாட்டல்களை வழங்கியுள்ளன என்றார்.
“அண்டை நாட்டு இராஜதந்திரக் கொள்கையில் சீனா எப்பொழுதும் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது” எனக் குறிப்பிட்ட அவர், தற்போது இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
வளர்ச்சி உத்திகளை ஒருங்கிணைத்தல், பரஸ்பர வெற்றியை ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவுக் கூட்டாண்மையை ஆழப்படுத்துதல் போன்றவற்றுக்காக இலங்கையுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்பட சீனா தயாராகவுள்ளது என்றும் தூதுவர் வெய் கூறினார்.
எதிர்வரும் ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்ட அவர், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவும், ரப்பர் - அரிசி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவும் அப்போது கொண்டாடப்படவுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
“இந்த நியமனம் தனக்குரிய மாபெரும் பொறுப்பையும் வரலாற்றுச் சிறப்பையும் நான் நன்கு உணர்ந்துள்ளேன்” என்று குறிப்பிட்ட தூதுவர் வெய், இரு நாடுகளுக்கு இடையிலான பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர நன்மை தரும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இலங்கையில் உள்ள சீனா சார்ந்த நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் தானும் தனது சகாக்களும் பாடுபடுவோம் என உறுதியளித்தார்.
மேலும், இரு நாடுகளின் அனைத்துத் தரப்பு பங்குதாரர்களுடனும் நெருக்கமான தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் பேணுமாறு அவர் அழைப்பு விடுத்ததுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான அவர்களது கருத்துகளையும் யோசனைகளையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
“சீனா - இலங்கை உறவுகளுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து அயராது பாடுபடுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.












